புதுச்சேரியில் கருணாநிதிக்கு முழுஉருவ வெண்கல சிலை நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் கருணாநிதிக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி அறிவித்து உள்ளார்.

Update: 2018-08-08 23:45 GMT

புதுச்சேரி,

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு புதுவை அமைச்சரவையில் நேற்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து முதல்–அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–

புதுவை அமைச்சரவையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே புதுவை அரசு சார்பில் ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு சார்பில் வருகிற 13–ந்தேதி வரை ஒரு வார துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் அரசு விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.

தமிழுக்கு பாடுபட்டவர் கருணாநிதி. அவரது பெயரில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைக்கப்படும். இதற்கான நிதியை புதுவை மாநில அரசு வழங்கும். இதன் மூலம் உலக அளவில் உள்ள அறிஞர்கள் தமிழ் ஆராய்ச்சிகளில் ஈடுபடலாம். காரைக்கால் பகுதியில் உள்ள பட்ட மேற்படிப்பு மையத்துக்கும், காரைக்கால் பைபாஸ் சாலைக்கும் கருணாநிதியின் பெயர் சூட்டப்படும். புதுவையிலும் ஒரு தெருவுக்கு கருணாநிதியின் பெயர் சூட்டப்படும்.

மேலும், புதுச்சேரியில் அவருக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும். இதற்கான இடத்தை குழு அமைத்து முடிவு செய்வோம். அவர் முதல்–அமைச்சராக இருந்தபோது புதுச்சேரிக்கு கேட்டதையெல்லாம் தந்தார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், தி.மு.க.வினருக்கும், தமிழக மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

மேலும் செய்திகள்