தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம்: மந்திராலயா, சட்டசபையில் தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறந்தது

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மராட்டிய தலைமை செயலகம் மற்றும் சட்ட சபையில் தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. அவரது உருவப்படத்துக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

Update: 2018-08-09 00:00 GMT
மும்பை,

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். கருணாநிதி மறைவை ஒட்டி தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

இதன்படி நேற்று அனைத்து மாநில தலைநகரங்களிலும் தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டன. மும்பை நரிமன்பாயிண்டில் உள்ள மராட்டிய அரசின் தலைமை செயலகமான மந்திராலயா கட்டிடம் மற்றும் சட்டசபை கட்டிடத்தில் தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், மும்பையின் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் கருணாநிதியின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்கள். தாராவியில் மும்பை தி.மு.க. சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அதன் பொறுப்புக்குழு செயலாளர் கருவூர் ரா.பழனிசாமி தலைமையில் ஏராளமான தி.மு.க.வினர் மற்றும் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

சயான் கோலிவாடாவில் கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. தலைமையில் பா.ஜனதாவினர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தும், மலர்களை தூவியும் கருணாநிதியின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

பாண்டுப்பில் பம்பாய் திருவள்ளுவர் மன்றம் சார்பில் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மன்ற செயலாளர் தேவதாசன், தலைவர் ஜேம்ஸ் தேவதாசன், இந்திய பேனா நண்பர் பேரவை தலைவர் கருண், பிரைட் மேல்நிலைப்பள்ளி முதல்வர் செலின் ஜேக்கப், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

ெபாய்சர் கிளை தி.மு.க. சார்பில் கிளை செயலாளர் மாரியப்பன், புறநகர் தி.மு.க. இலக்கிய அணி துணை செயலாளர் மணிமாறன், சதாசிவம், மூர்த்தி உள்பட பலர் கருணாநிதியின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

மும்பை புறநகர் தி.மு.க. பிவண்டி கிளை சார்பில் செயலாளர் மெகபூப்பாஷா, முகமது அலி, இளைஞரணி அமைப்பாளர் வசந்தகுமார், துணை அமைப்பாளர் கணேசன், தமிழரசன் உள்பட பலர் கருணாநிதியின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

காட்கோபர் காமராஜ் நகரில் மும்பை ம.தி.மு.க. சார்பில் அமைப்பாளர் தமிழழகன் உள்பட பலர் கருணாநிதியின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இதேபோல தமிழர்கள் வசிக்கும் பல்வேறு இடங்களிலும் கருணாநிதியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்