தூத்துக்குடி மாநகராட்சியில் அங்கன்வாடி மையங்களை நவீன மயமாக்க திட்டம் ஆணையாளர் தகவல்

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 22 அங்கன்வாடி மையங்களை நவீன மயமாக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான்வர்க்கீஸ் தெரிவித்து உள்ளார்.

Update: 2018-08-09 21:00 GMT

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 22 அங்கன்வாடி மையங்களை நவீன மயமாக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான்வர்க்கீஸ் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;–

அங்கன்வாடி மையங்கள்

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் அழகேசபுரம், வடக்கு பத்திரகாளியம்மன் கோவில் தெரு, சாமுவேல்புரம், செல்வநாயகபுரம், கே.வி.கே.நகர், ரகுமத்துல்லாபுரம், சாரங்கபாணி தெரு, சத்திரம்தெரு, டூவிபுரம், வி.வி.டி.பூங்கா, மங்களபுரம், சுப்பையா பூங்கா, திரேஸ்புரம் மற்றும் வரதராஜபுரம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள 22 அங்கன்வாடி மையங்கள் நவீன மயமாக்கப்பட உள்ளன.

நவீன வசதிகள்

இதன்படி, இந்த மையங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மின்வசதி, இருக்கை வசதிகள், குழந்தைகளின் வருகையினை உறுதி செய்வதற்கான பயோமெட்ரிக் வசதி, எல்.இ.டி. டி.வி., குழந்தைகளின் மனதைக் கவரும் வகையிலான வண்ண ஓவியங்கள், பசுமை நிறைந்த காற்றோட்டமான அறைகள் மற்றும் கழிப்பிட வசதிகள் என அனைத்து அம்சங்களுடன் கூடிய நவீன வசதிகள் அமைப்பதற்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது.

புதுப்பிப்பு

இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் அமைந்துள்ள மீதமுள்ள அங்கன்வாடிகளும் மேலே குறிப்பிட்ட அனைத்து வசதிகளுடன் புதுப்பிக்கப்படும்.

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்