குளச்சல் விசைப்படகுகளில் ஏராளமான நவரை, கணவாய் மீன்கள் கிடைத்தன

குளச்சல் விசைப்படகுகளில் ஏராளமான நவரை, கணவாய் மீன்கள் கிடைத்தன.

Update: 2018-08-09 23:00 GMT
குளச்சல்,

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமரம், வள்ளங்களும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

கட்டுமரங்கள் மற்றும் வள்ளங்களில் மீன்பிடிக்கும் மீனவர்கள் தினமும் அதிகாலையில் கடலுக்கு சென்றுவிட்டு மதியம் கரை திரும்புவார்கள். விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று 10 நாட்கள் வரை தங்கியிருந்து மீன்பிடிப்பார்கள்.

கடந்த ஜூன், ஜூலை மாதங்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்ததால் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்கள் தங்களது படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்து, பராமரிப்பு பணி மேற்கொண்டனர். தடைக்காலம் முடிந்து கடந்த 1–ந் தேதி முதல் விசைப்படகுகள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. அந்த படகுகள் தற்போது கரை திரும்பிய வண்ணம் உள்ளன.

 இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலையில் சில படகுகள் கரை திரும்பின. கருணாநிதி மறைவையொட்டி, துக்கத்தை அனுசரிக்கும் வகையில் மீனவர்கள் பிடித்து வந்த மீன்கள் இறக்கப்படவில்லை. அவை விசைப்படகில் அப்படியே இருந்தன.

நேற்று காலையில் அந்த விசைப்படகுகளில் இருந்த மீன்கள் இறக்கப்பட்டு ஏலக்கூடத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

நேற்றும் சில விசைப்படகுகள் கரைதிரும்பின. இந்த விசைப்படகுகளில் நவரை, கணவாய் போன்ற மீன்கள் ஏராளமாக கிடைத்து இருந்தன.  இந்த மீன்கள் ஏலக்கூடத்தில் வைத்து ஏலமிடப்பட்டது.

அவற்றை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் போட்டிபோட்டு வாங்கி சென்றனர்.

மேலும் செய்திகள்