புதிய மாவட்ட கல்வி அலுவலகங்கள் குறித்த ஆய்வு கூட்டம்

புதிய மாவட்ட கல்வி அலுவலகங்கள் குறித்த ஆய்வு கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட ஆய்வு அதிகாரியும், அரசு தேர்வுகள் இயக்கக இணை இயக்குனருமான அமுதவல்லி தலைமையில் நடந்தது.

Update: 2018-08-09 22:45 GMT
புதுக்கோட்டை,

புதிய மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட ஆய்வு அதிகாரியும், அரசு தேர்வுகள் இயக்கக இணை இயக்குனருமான அமுதவல்லி தலைமை தாங்கி, மாவட்டத்தில் உள்ள மொத்த பள்ளிகள் வகை வாரியான எண்ணிக்கை, 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளி வாரியாக பள்ளி மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை, மாவட்டத்தில் உள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை, பள்ளி மாணவ, மாணவிகளின் சேர்க்கை விவரம் போன்றவை குறித்து ஆய்வு செய்தார்.

மேலும் தனியார் பள்ளிகளில் கல்வி உரிமை சட்டத்தின்படி மாணவ, மாணவிகளின் சேர்க்கை விவரம், நீதிமன்ற வழக்குகள் நிலுவை விவரங்கள், அவற்றின் தற்போதைய நிலை குறித்த விவரம், கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை மாவட்ட அளவில் பொதுத்தேர்வு முடிவுகள் விவரம், கல்வி தகவல் மேலாண்மை முறைமையின்படி பதிவு செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை விவரம், வட்டாரக்கல்வி அலுவலர்கள் பள்ளி பார்வை விவரம், மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் போன்றவை குறித்து ஆய்வு செய்தார்.

கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா, மாவட்ட கல்வி அதிகாரிகள் சாமி.சத்தியமூர்த்தி, திராவிடச்செல்வம், குணசேகரன் மற்றும் அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக இலுப்பூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட மாத்தூர் சிறப்பு அரசு மேல்நிலைப்பள்ளி, கீரனூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி போன்றவற்றை மாவட்ட ஆய்வு அதிகாரி அமுதவல்லி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட அரசின் நலத்திட்டங்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து, தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். 

மேலும் செய்திகள்