அதிராம்பட்டினத்தில் அதிகளவில் பிடிபடும் “வெட்டரிச்சான்” இறால்களால் ஆபத்து மீனவர்கள் கவலை

அதிராம்பட்டினத்தில் அதிகளவில் பிடிபடும் “வெட்டரிச்சான்” இறால்களால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.

Update: 2018-08-09 22:45 GMT
அதிராம்பட்டினம்,

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடல் பகுதியில் இறால்கள், நண்டுகள் அதிக அளவில் பிடிபடுகின்றன. இந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் இறால்களை பிடிப்பதற்கு தனி வகையான வலைகளை பயன்படுத்துகிறார்கள். அதிராம்பட்டினத்தில் பிடிபடும் இறால்கள் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அதிராம்பட்டினம் பகுதியில் “வெட்டரிச்சான்” என்ற ஒரு வகையான இறால் பிடிபடுவதாக மீனவர்கள் கூறுகிறார்கள். இந்த வகை இறால்கள் ஆபத்தானவை. இவை உணவாக பயன்படாது என்பதால் வலையில் பிடிபடும் வெட்டரிச்சான்களை மீனவர்கள் மீண்டும் கடலிலேயே விட்டு விடுகிறார்கள்.

கூர்மையான முட்களுடன் காணப்படும் இந்த வகை இறால்களை, வலையில் இருந்து அகற்றும்போது மீனவர்கள் காயமடைவது வாடிக்கையாகி விட்டது. இதனால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அதிராம் பட்டினம் மீனவர் சங்கர் கூறியதாவது:-

தற்போது ஆடி மாதம் என்பதால் வழக்கத்தை விட கடலில் காற்று பலமாக வீசுகிறது. இதனால் மாறுபடும் கடல் நீரோட்டம் காரணமாக வெட்டரிச்சான்கள் வலையில் அதிகளவில் பிடிபடுகின்றன. இவை ஆபத்தானவை என்பதால் வலையில் இருந்து அகற்றுவது கடினமாக உள்ளது.

அதன் உடலை சுற்றி இருக்கும் முட்கள் கைகளை பதம் பார்த்து விடுகின்றன. ஒரு வலைக்கு சராசரியாக 20 வெட்டரிச்சான்கள் பிடிபடுகின்றன.

வெட்டரிச்சான்களின் முட்கள் பட்ட பகுதியில் ஒரு மணி நேரம் வரை தொடர்ந்து வலி இருந்து கொண்டே இருக்கும். இந்த சீசன் மாறும்போது வலையில் பிடிபடும் வெட்டரிச்சான்களின் எண்ணிக்கையும் குறைந்து விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்