வையம்பட்டி அருகே குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை

வையம்பட்டி அருகே குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-08-09 22:45 GMT
வையம்பட்டி,

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள பழையகோட்டை ஊராட்சிக்குட்பட்ட புறத்தாக்குடி பகுதியில் கடந்த ஒரு மாதமாக முறையாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தண்ணீர் இன்றி கடும் அவதிக்கு ஆளாகி வந்த பொதுமக்கள் இதுபற்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் தண்ணீரை தேடி அலைந்து வந்த கிராம பொதுமக்கள் நேற்று காலை ஆத்திரமடைந்து புறத்தாக்குடியில் உள்ள பழையகோட்டை ஊராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த ஊராட்சி செயலாளர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரி சம்பவ இடத்திற்கு சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பொது மக்களின் முற்றுகை போராட்டம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்