குடும்பத்தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை

ஈரோட்டில் குடும்பத்தகராறில் மனைவி கண் முன்னே தொழிலாளியை உறவினர்கள் அடித்துக் கொன்றனர்.

Update: 2018-08-09 23:32 GMT
ஈரோடு, 


இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஈரோடு பெரியசேமூர் அருகே உள்ள கல்லாங்கரடு ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் முத்து. இவருடைய மகன் செல்வகுமார் (வயது 25). விசைத்தறி தொழிலாளி. இவருடைய மனைவி லீலாவதி (22). இவர்களுக்கு சுதர்சன் (2) என்கிற ஒரு மகன் உள்ளான். அதே பகுதியில் செல்வகுமாரின் அண்ணன் மணியன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

கடந்த 3-ந் தேதி மணியனின் மனைவி லட்சுமி (28) வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடிக்கொண்டு இருந்தனர். அப்போது லட்சுமி சேலம் மாவட்டம் சங்ககிரியில் இருப்பதாக தகவல் கிடைத்து செல்வகுமார் அங்கு சென்றார். அதன்பின்னர் லட்சுமியை அவர் ஈரோட்டிற்கு வலுக்கட்டாயமாக அழைத்து வந்ததாக தெரிகிறது. இதனால் செல்வகுமாரின் மீது லட்சுமி கோபத்துடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று மதியம் வீட்டின் முன்பு லட்சுமி நின்றுகொண்டு இருந்தார். அவர் வீட்டு வழியாக செல்வகுமார் நடந்து சென்றார். அப்போது செல்வகுமாரிடம் லட்சுமி, தான் இருந்த இடத்தை காட்டி கொடுத்ததுடன் தன்னை வலுக்கட்டாயமாக அழைத்து வந்தது தொடர்பாக கேட்டார். இதில் அவர்கள் 2 பேருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த லட்சுமி அருகில் கிடந்த ஒரு கட்டையை எடுத்து செல்வகுமாரை தாக்கி உள்ளார்.

அவர்களிடையே ஏற்பட்ட தகராறில் சத்தம் கேட்டதும், உறவினர்கள் சிலர் அங்கு திரண்டு வந்தனர். அவர்களும் லட்சுமிக்கு ஆதரவாக செல்வகுமாரை சரமாரியாக தாக்க தொடங்கினார்கள். இதை பார்த்ததும் செல்வகுமாரின் மனைவி லீலாவதி அங்கு சென்று லட்சுமியையும், உறவினர்களையும் தடுக்க முயன்றார். அதையும் மீறி உறவினர்கள் செல்வகுமாரின் மீது பயங்கரமாக தாக்கினார்கள். மேலும், அவருடைய மர்ம உறுப்பையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் செல்வகுமார் மயக்கம் அடைந்தார்.

அங்கு திரண்ட பொதுமக்கள் அவர்களுடைய சண்டையை விலக்கி விட்டனர். அதன்பின்னர் படுகாயம் அடைந்த செல்வகுமாரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் செல்வகுமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கொலை செய்தவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மனைவி கண் முன்னே தொழிலாளியை உறவினர்கள் அடித்துக்கொன்ற சம்பவம் பெரியசேமூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்