மாமல்லபுரம் அருகே பண்ணை வீட்டில் மூதாட்டியிடம் 10 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

மாமல்லபுரம் அருகே பண்ணை வீட்டில் மூதாட்டியிடம் 10 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்தனர். அவர்களை தடுக்க முயன்ற மூதாட்டியின் கணவருக்கு கத்திக்குத்து விழுந்தது.

Update: 2018-08-10 22:30 GMT
மாமல்லபுரம்,

மாமல்லபுரம் அருகே பையனூரில் உள்ள பண்ணை வீட்டில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஹேமசந்திரா ரெட்டி (வயது 75), இவரது மனைவி ஜெயம்மா (70) ஆகியோர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் மர்ம நபர்கள் 2 பேர் வீட்டின் முன்பக்க கதவை நேற்று தட்டினர். அப்போது ஜெயம்மா கதவை திறந்தார். உடனே மர்ம நபர்கள், மூதாட்டியின் கழுத்தில் இருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஹேமசந்திரா ரெட்டி, மர்ம நபர்களை பிடிக்க முயன்றார். அதில் ஒருவன் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து ஹேமசந்திரா ரெட்டியின் வயிற்றில் குத்தினான். பின்னர் 10 பவுன் தங்க சங்கிலியுடன் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

ஆபத்தான நிலையில் ஹேமசந்திரா ரெட்டி கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது பற்றி அறிந்த காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி அங்கு வந்து விசாரணை நடத்தினார். இச்சம்பவம் தொடர்பாக மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்