போக்குவரத்து ஊழியர் மனைவியின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1½ லட்சம் திருட்டு, போலீசார் விசாரணை

போக்குவரத்து ஊழியர் மனைவியின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1½ லட்சம் நூதன முறையில் திருடப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-08-10 22:30 GMT
காரைக்கால்,

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு ரெயிலடி தெருவை சேர்ந்தவர் சுரேஷ். புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் ஊழியராக பணியாற்றியவர். கடந்த 2014-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் சுரேஷ் இறந்து போனார். இதையடுத்து எல்.ஐ.சி. நிறுவனத்தில் அவர் செலுத்தி இருந்த காப்பீட்டு தொகை ரூ.3 லட்சத்து 40 ஆயிரம், சுரேசின் மனைவி ஜெமுனியாபாய் கணக்கு வைத்துள்ள காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் செலுத்தப்பட்டது.

இந்த தொகையில், ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை தனது மகள் சுருதி பெயரில் ஜெமினியாபாய் வங்கியில் டெபாசிட் செய்தார். மீதி தொகையான ஒரு லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் அவரது வங்கி கணக்கில் இருந்தது.

இந்த பணத்தை நேற்று முன்தினம் எடுப்பதற்காக ஜெமுனியாபாய் வங்கிக்கு சென்றார். அங்கு தனது கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று விசாரித்தார். அதில் ரூ.43 ஆயிரம் மட்டுமே இருந்தது. இதை அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1½ லட்சம் மாயமானது குறித்து வங்கி அதிகாரிகளிடம் ஜெமுனியாபாய் முறையிட்டார். இதையடுத்து அவரது வங்கிக்கணக்கை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, கடந்த 5, 6, 7 ஆகிய தேதிகளில் தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் 1½ லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டது தெரியவந்தது.

இதனால் ஏமாற்றம் அடைந்த ஜெமுனியாபாய், தனது வங்கிக்கணக்கில் இருந்து பணம் மாயமானது தொடர்பாக திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வங்கிக்கணக்கில் இருந்து 1½ லட்சம் ரூபாய் நூதன முறையில் திருடப்பட்ட சம்பவம் காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்