கார் மீது லாரி மோதல்; 3 மாத குழந்தை பலி

திண்டிவனம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

Update: 2018-08-10 22:25 GMT
திண்டிவனம், 


தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது 60). இவர் தனது உறவினர்கள் ஸ்ரீராஜன்(45), செல்வி(42), சந்திரகனி(45), சபரிகுமார்(5), தன்சிகா என்ற 3 மாத பெண் குழந்தை ஆகியோருடன் ஒரு காரில் சென்னைக்கு புறப்பட்டார். காரை சென்னை நன்மங்கலத்தை சேர்ந்த ஜானகிராமன் (25) என்பவர் ஓட்டினார். திண்டிவனம் அடுத்த மேல்பேட்டை என்ற இடத்தில் சென்ற போது, பின்னால் திண்டிவனத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்ற லாரி ஒன்று, இவர்கள் சென்ற கார் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த குழந்தை தன்சிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. கண்ணன் உள்ளிட்ட 6 பேர் லேசான காயமடைந்தனர்.


இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த தகவல் அறிந்த ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தன்சிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்