சோளிங்கர் அருகே டெய்லர் வீட்டில் 17 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் திருட்டு

சோளிங்கர் அருகே டெய்லர் வீட்டில் 17 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-08-10 23:15 GMT
சோளிங்கர்,

சோளிங்கர் அருகே டெய்லர் வீட்டில் 17 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் திருடிச் சென்ற துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சோளிங்கரை அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன்நாதன் (வயது 37), சோளிங்கர் பஜாரில் டெய்லர் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் காலையில் ஜெகன்நாதன் வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் கடைக்கு சென்றார். பின்னர் இரவில் வீட்டிற்கு வந்தபோது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து கணவன் - மனைவி இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 20 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சோளிங்கர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது காம்பவுண்டு சுவர் பகுதியில் 3 பவுன் நகை இருந்தது. மர்ம நபர்கள் நகை - பணத்துடன் காம்பவுண்டு சுவரை தாண்டி செல்லும்போது அந்த நகை கீழே விழுந்துள்ளது தெரியவந்தது. அதனை போலீசார் மீட்டனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்