வீடு புகுந்து தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் நகை திருட்டு

திண்டுக்கல் அருகே வீடு புகுந்து தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-08-11 00:05 GMT
திண்டுக்கல், 



திண்டுக்கல் அருகே உள்ள முள்ளிப்பாடி ஏழுமலையான் தெருவை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 45). தச்சுத்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு தனது மனைவி ராஜலட்சுமி (41) மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். நேற்று அதிகாலை 3.45 மணியளவில் மர்ம நபர் ஒருவர் அவருடைய வீட்டின் சுற்றுச்சுவர் வழியாக ஏறி உள்ளே குதித்தார்.

பின்னர், வீட்டுக்குள் நைசாக புகுந்த மர்ம நபர் தூங்கிக்கொண்டிருந்த ராஜலட்சுமியின் கழுத்தில் இருந்த 3 பவுன் நகையை பறித்தார். இதனால், திடுக்கிட்டு எழுந்த அவர் திருடனை பார்த்து அலறினார். இவரது சத்தம் கேட்டு எழுந்த பழனிசாமி மர்ம நபரை பிடிக்க முயன்றார். அதற்குள் அவர் சுற்றுச்சுவர் வழியாக ஏறி வெளியே குதித்தார்.

அங்கு, மற்றொரு நபர் தயாராக நிறுத்தியிருந்த மோட்டார்சைக்கிளில் ஏறி இருவரும் தப்பி சென்றுவிட்டனர். முன்னதாக, தாமரைப்பாடியிலும் ஒரு வீட்டுக்குள் புகுந்து திருட முயன்றுள்ளனர். ஆனால், அங்கு நகை, பணம் இல்லாததால் முள்ளிப்பாடிக்கு தப்பி வந்து உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் ராஜலட்சுமி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்