தண்ணீர் அண்டாவில் மூழ்கடித்து 7 மாத குழந்தை கொலை?

பண்ருட்டி அருகே வீட்டின் குளியலறையில் இருந்த தண்ணீர் அண்டாவில் மூழ்கிய நிலையில் 7 மாத குழந்தை இறந்து கிடந்தது. அந்த குழந்தை அண்டாவுக்குள் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தையின் தாய் மாயமாகி விட்டதால், அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2018-08-11 00:16 GMT
புதுப்பேட்டை, 



இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கட்டமுத்துப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் சிலம்பரசன். இவரது மனைவி ஜெயசித்ரா. இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு 3 வயதில் மிதுன், 7 மாதத்தில் லட்சன் என்ற 2 ஆண் குழந்தைகள் இருந்த னர்.

சிலம்பரசன் புதுச்சேரி மாநிலம் வடமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் சோப்பு கம்பெனியில் வேலை பர்த்து வருகிறார். மிதுன், விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிரிகேஜி படித்து வருகிறான்.

நேற்று முன்தினம், வழக்கம்போல் சிலம்பரசன், வேலைக்கு சென்றுவிட்டார். மிதுன் பள்ளிக்கு சென்ற பின்னர், வீட்டில் லட்சனுடன் ஜெயசித்ரா இருந்தார். இந்நிலையில் மதியம், கலியமூர்த்தி வீட்டுக்கு வந்தார். அப்போது, ஜெயசித்ரா மற்றும் லட்சன் ஆகியோர் வீட்டில் இல்லை. இதையடுத்து அவர்களை பல இடங்களில் அவர் தேடி பார்த்தார். இருப்பினும் அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.

பின்னர், சந்தேகத்தின் பேரில் வீட்டில் குளியலறையின் உள்ளே சென்று பார்த்த போது, அங்கு ஒரு அண்டா மூடி வைக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதை பார்த்து சந்தேகமடைந்த, கலியமூர்த்தி, மூடியை திறந்து பார்த்தார். அதில் அண்டாவின் மேலே பழைய துணிகளும், அதன் கீழ் தண்ணீரும் இருந்தது. இதையடுத்து, துணிகளை நீக்கிவிட்டு அவர் பார்த்த போது, தண்ணீரில், மூழ்கிய படி லட்சன் பிணமாக கிடந்தான்.

தாய் மாயம்

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடன் தனது மகன் மற்றும் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அங்கு விரைந்து வந்து, பிணமாக கிடந்த குழந்தையை பார்த்து கதறி அழுதனர். ஆனால், வீட்டில் ஜெயசித்ரா இல்லை. அவர் என்ன ஆனார்? எங்கு சென்றார்? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இதையடுத்து சிலம்பரசனின் குடும்பத்தினர் நேற்று முன்தினம் இந்த சம்பவத்தை போலீசில் தெரிவிக்காமல், குழந்தையின் உடலை வீட்டில் வைத்திருந்த படியே ஜெயசித்ராவை தேடி வந்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக நேற்று காலை புதுப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிலம்பரசனின் வீட்டுக்கு இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பரந்தாமன், செல்வம் மற்றும் போலீசார் விரைந்தனர்.

அங்கு சிலம்பரசன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்திய போலீசார், சம்பவம் நடந்த குளியலறை பகுதியை பார்வையிட்டனர். பின்னர் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

லட்சன் அண்டாவில் இருந்த நீரில் இறந்து கிடந்து, பழைய துணியால் மூடப்பட்டு, அதன்மேல் அண்டா மூடியை கொண்டு மூடப்பட்டு இருந்ததால், குழந்தையை நீரில் மூழ்க செய்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அதேநேரத்தில் ஜெயசித்ரா சம்பவம் நடந்த தினத்தில் இருந்தே வீட்டில் இருந்து மாயமாகி விட்டார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தான் பெற்ற குழந்தையையே கொலை செய்து விட்டு, அவர் தலைமறைவாகி விட்டாரா? அல்லது அவருக்கும் வேறு ஏதாவது நேர்ந்துவிட்டதா?, இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக கலியமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஜெயசித்ராவை கண்டுபிடித்தால்தான், குழந்தை லட்சன் சாவில் உள்ள மர்மம் விலகுவதுடன் பல திடுக்கிடும் தகவல் வெளியாகும் என்று போலீசார் தரப்பில் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

மேலும் செய்திகள்