கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாத சுவாமி கோவிலில் ஆவணித்தவசு திருவிழா கொடியேற்றம்

கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாத சுவாமி கோவிலில் ஆவணித்தவசு திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2018-08-11 10:00 GMT
சங்கரன்கோவில்,

கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாத சுவாமி கோவிலில் ஆவணித்தவசு திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பால்வண்ணநாத சுவாமி

சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரில் ஒப்பனையம்மாள் சமேத பால்வண்ணநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணித்தவசு திருவிழா தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறுவது வழக்கம். விழா நாட்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவது வழக்கம். கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் இன்னிசை கச்சேரிகள், சொற்பொழிவுகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை அம்பாள் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடி மரத்தில் காலை 9.50 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.

விழாவில் கோவில் துணை ஆணையர் செல்லத்துரை, தொழில் அதிபர்கள் சுப்பிரமணியன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

20-ந் தேதி தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் 11-ம் திருநாளான வருகிற 20-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. சிகர நிகழ்ச்சியான ஆவணித்தவசு திருவிழா 13-ம் திருநாளான 22-ந் தேதி (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு மேல் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்