வடபழனியில் துணிக்கடையில் தீ விபத்து

வடபழனியில், துணிக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

Update: 2018-08-11 22:30 GMT
பூந்தமல்லி,

சென்னை வடபழனி துரைசாமி சாலையை சேர்ந்தவர் ராம்நாதன்(வயது 41). அதே பகுதியில் உள்ள கட்டிடத்தின் முதல் மாடியில் பெண்களுக்கான துணிக்கடை மற்றும் தையல் கடை நடத்தி வருகிறார். அங்கு 15-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்று விட்டனர். நேற்று காலை அவரது கடைக்குள் இருந்து புகை வந்தது. இதுபற்றி அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் ராம்நாதன், கடைக்கு சென்று பார்த்தார். கடையின் உள்ளே தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கோயம்பேடு, தி.நகர், சைதாப்பேட்டை, அசோக் நகர் ஆகிய பகுதிகளில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் துணிக்கடையில் கொழுந்து விட்டு எரிந்த தீயை சுமார் 2 மணி நேரம் போராடி அணைத்தனர்.

தீ விபத்தில் கடையில் விற்பனைக்கு வைத்து இருந்த துணிகள், 10 தையல் எந்திரங்கள், கம்ப்யூட்டர் மற்றும் இருக்கைகள் அனைத்தும் தீக்கிரையாகின. இவற்றின் மதிப்பு ரூ.6 லட்சம் என்று கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்கசிவு காரணமாக துணிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்