காவேரிப்பட்டணம் அருகே தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது 17 பவுன் நகைகள் மீட்பு

காவேரிப்பட்டணம் அருகே தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 17 பவுன் நகைகளை மீட்டனர்.

Update: 2018-08-11 22:15 GMT
காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணந்தூர் அருகே உள்ள செட்டிகொட்டாய் கிராமத்தை சேர்ந்த காளிப்பன் என்பவர் நேற்று ஒடச்சிக்கரையில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி 500 ரூபாய் மற்றும் நகைகளை பறித்துக்கொண்டு தப்பியோட முயற்சி செய்தார்.

இதைப் பார்த்த பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து பாரூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிடிபட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் அவர் பண்ணந்தூர் பட்டாளம்மன் கோவில் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் கார்த்திகேயன் (வயது 22) என்பதும், இவர் காவேரிப்பட்டணம் பகுதிகளில் தொடர்ந்து திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருடைய வீட்டில் கோழிக்கூண்டில் பதுக்கி வைத்திருந்த 17 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். 

மேலும் செய்திகள்