ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா - திரளான பக்தர்கள் தரிசனம்

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2018-08-11 23:15 GMT
ஏரல்,

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவில் சுவாமி பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி, வீதிஉலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் வில்லிசை, பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம், இன்னிசை நிகழ்ச்சி போன்றவை நடந்தது.

10-ம் திருநாளான நேற்று ஆடி அமாவாசை திருவிழா நடந்தது. மதியம் சுவாமி உருகுபலகையில் கற்பூரவிலாசம் வரும் காட்சி, சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலையில் இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலம், இரவில் 1-ம் காலம் கற்பகப்பொன் சப்பரத்தில் எழுந்தருளல் நடந்தது.

விழாவையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் குடும்பத்தினருடன் தங்கியிருந்து வழிபட்டனர். காலை முதல் இரவு வரையிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏரலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ் தலைமையில், நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

11-ம் திருநாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு 2-ம் காலம் வெள்ளை சாத்தி தரிசனம், காலை 8.30 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 1.30 மணிக்கு 3-ம் காலம் பச்சை சாத்தி தரிசனம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவில் பந்தலில் தாகசாந்தி, இரவு 10.30 மணிக்கு சுவாமி கோவில் மூலஸ்தானம் வந்து சேரும் ஆனந்த காட்சி, திருக்கற்பூர தீப தரிசனம் நடக்கிறது.

12-ம் திருநாளான நாளை (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு தீர்த்தவாரி தாமிரபரணி ஆற்றில் சகல நோய் தீர்க்கும் திருத்துறையில் நீராடல், மதியம் 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 3 மணிக்கு ஆலிலை சயன அலங்காரம், மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு 9 மணிக்கு திருவருள் புரியும் மங்கள தரிசனம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.

மேலும் செய்திகள்