திருச்சியில் முஸ்லிம் அமைப்பு சார்பில் பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக மனித சங்கிலி

திருச்சியில் முஸ்லிம் அமைப்பு சார்பில், பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக மனித சங்கிலி நடைபெற்றது.

Update: 2018-08-12 23:00 GMT
திருச்சி,

திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் இருந்து ஜங்ஷன் ரவுண்டானா வரை ‘ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த்’ என்ற முஸ்லிம் அமைப்பின் சார்பில் நேற்று மனித சங்கிலி நடைபெற்றது. பெண்கள் மீதான அநீதிகள், கொடுமைகளுக்கு எதிராகவும், அச்சத்தில் இருந்து பெண்களை பாதுகாக்க வேண்டும், பெண்களின் உரிமைகளை பாதுகாத்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த மனித சங்கிலிக்கு மகளிர் அணி பொறுப்பாளர் மும்தாஜ் பேகம் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் நவாஸ்கான் மனித சங்கிலியை தொடங்கி வைத்தார்.

மனித சங்கிலியில் மும்தாஜ் பேகம் பேசுகையில் ‘இந்தியாவில் குமரி முதல் கிழவி வரை கற்பழிக்கப்படுகிறார்கள். பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமிகளை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசியல் சட்டப்படி பெண்களுக்கான உரிமைகளை வழங்க வேண்டும், பொது இடங்களில் பெண்களை கண்ணியமாக நடத்த வேண்டும், பெண்மையை போற்றி பாதுகாக்க வேண்டும்’ என்றார்.

செயலாளர் பைரோஸ் பேகம் உள்பட ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் இதில் கலந்து கொண்டனர். மனித சங்கிலியில் பங்கேற்ற அனைவரும் கையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வைத்து இருந்தனர். 

மேலும் செய்திகள்