திருவண்ணாமலையில் போலீஸ் ஏட்டு வீட்டில் நகை-பணம் திருட்டு

திருவண்ணாமலையில் போலீஸ் ஏட்டு வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது.

Update: 2018-08-12 23:00 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை வேங்கிக்கால் புதூர் அண்ணாமலையார் நகர் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார், செங்கம் போலீஸ் நிலையத்தில் தலைமை ஏட்டுவாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கலையரசி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் அசோக்குமார் வேலைக்கு சென்றுவிட்டார். இதனையடுத்து அவரது மனைவி கலையரசி 2 மகன்களுடன் செங்கத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று காலையில் அசோக்குமார் வீட்டிற்கு வந்து உள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த 8 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்