ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டல்: வீட்டை மீட்டுத்தரக்கோரி தம்பதி தர்ணா

ரூ.25 லட்சம் கேட்டு கடன் கொடுத்தவர்கள் மிரட்டுவதாகவும், அவர்களிடம் இருந்து வீட்டை மீட்டுத்தரக்கோரியும் வடமதுரையில் காந்தி சிலை முன்பு தம்பதியினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

Update: 2018-08-12 22:00 GMT
வடமதுரை, 



திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை இ.பி.காலனியை சேர்ந்தவர் சேகர். அவருடைய மனைவி டெய்சிராணி (வயது38). இவர், தனது கணவரின் தம்பி தேவராஜின் குடும்ப தேவைக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வடமதுரை பகுதியை சேர்ந்த 2 பேரிடம் இருந்து ரூ.10 லட்சம் கடனாக வாங்கி கொடுத்தார்.

இதற்காக அவர்களிடம், டெய்சிராணி தங்கள் வீட்டுப்பத்திரத்தை அடமானமாக அவர்களுக்கு எழுதி கொடுத்திருந்தார். மாதந்தோறும் கடனுக்கான வட்டியை டெய்சிராணி செலுத்தி வந்தார். இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள், ரூ.25 லட்சம் கொடுத்தால்தான் டெய்சிராணியின் வீட்டுப்பத்திரத்தை கொடுக்க முடியும் என்று கூறி மிரட்டினர்.

இதைத்தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 4-ந்தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைக்க முயன்றார். அப்போது அருகில் இருந்த போலீசார், டெய்சிராணியின் உடலில் தண்ணீரை ஊற்றி அவரை தடுத்தனர்.

அதன்பின்னர் அவர் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினயிடம் தனது கோரிக்கை மனுவை கொடுத்து விட்டு சென்றார். ஆனால் அதன்பிறகும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மனமுடைந்த டெய்சிராணி மற்றும் அவருடைய கணவர் சேகர் இருவரும் வீட்டை மீட்டுத்தரக்கோரி வடமதுரை பஸ்நிறுத்தம் அருகே உள்ள காந்திசிலை முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் செய்தனர்.

இது குறித்து தகவலறிந்த வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூரிய திலகராணி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிரச்சினை குறித்து இரு தரப்பையும் அழைத்து விசாரணை செய்யப்படும் என்று போலீசார் கூறி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்