முதல்- மந்திரி தேவேந்திர பட்னாவிசின் பாதுகாப்பு அணிவகுப்பு கார்கள் 13 தடவை விதிமுறை மீறல்

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் பாதுகாப்பு அணிவகுப்பு கார்கள் 13 முறை போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபட்டது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

Update: 2018-08-14 23:49 GMT
மும்பை,

மும்பையை சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் ஒருவர் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் கார்களின் போக்குவரத்து விதிமுறை மீறல்கள் குறித்த தகவலை கோரியிருந்தார். இதற்கு போக்குவரத்து போலீசார் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பாதுகாப்பு அணிவகுப்புக்கு பயன்படுத்தும் இரண்டு கார்கள் கடந்த ஜனவரி 12-ந் தேதி முதல் ஆகஸ்டு 12-ந் தேதி வரை 13 முறை போக்குவரத்து விதிமுறைகளை மீறியுள்ளது. இதில் ஒரு கார் மட்டும் 5 முறையும், மற்றொரு கார் 8 முறை அதிவேகத்தில் சென்று விதிமுறை மீறலில் ஈடுபட்டது.

இந்த விதிமுறை மீறல்கள் பாந்திரா ஒர்லி கடற்கரை சாலையில் உள்ள கேமராக்களில் பதிவாகி உள்ளது. ஒவ்வொரு முறைக்கும் ரூ. 1000 வீதம் மொத்தம் ரூ.13 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ முதல்-மந்திரியின் பாதுகாப்பு அணிவகுப்பு வாகனங்களுக்கு வேக கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் வேகத்தை கணக்கிடும் கேமராக்கள் தானியங்கி மூலம் இயங்குவதால் தன்னிச்சையாகவே விதிமுறை மீறலுக்கான அபராத ரசீதை உருவாக்க கூடியது ஆகும். எனவே இந்த பிரச்சினையை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் ” என்றார்.

மேலும் செய்திகள்