பிளஸ்-2 மாணவியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை

பிளஸ்-2 மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபர் மற்றும் உடந்தையாக இருந்த அவருடைய தாயார் உள்பட 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

Update: 2018-08-21 22:06 GMT
தேனி,

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

மதுரை மாவட்டம் பேரையூர் பெரியகட்டளை பகுதியை சேர்ந்த சதுரகிரி மகன் செல்வராஜ் (வயது 28). இவர், தேனி மாவட்டம் கண்டமனூர் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவரை கடந்த 2015-ம் ஆண்டு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதற்கு செல்வராஜின் தாயார் மாரியம்மாள் (55), அண்ணன் பால்பாண்டி (32), தம்பி சவுந்தர் (23) ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் கண்டமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் அவர்கள் மீது தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து, நீதிபதி திலகவதி நேற்று தீர்ப்பு கூறினார்.

மாணவியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த செல்வராஜ் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த மாரியம்மாள், பால்பாண்டி, சவுந்தர் ஆகிய 4 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரும் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

பிளஸ்-2 மாணவியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை 

மேலும் செய்திகள்