கன்னியாகுமரியில் இருந்து இரணியலுக்கு ஷீரடி சாய்பாபா ரத யாத்திரை ஊர்வலம்

கன்னியாகுமரியில் இருந்து இரணியலுக்கு ஷீரடி சாய்பாபா ரத யாத்திரை ஊர்வலம் சென்றது.

Update: 2018-08-26 22:30 GMT
கன்னியாகுமரி,

இரணியலில் ஷீரடி சாய்பாபா அன்பாலயம் ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த ஆலயத்தில் அமைய இருக்கும் ஷீரடி சாய்பாபாவின் உருவச்சிலை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் வைக்கப்பட்டு இருந்தது.

இந்த சிலை நேற்று குகநாதீஸ்வரர் கோவிலில் இருந்து ரத அலங்காரத்துடன் பூஜைகள் செய்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், அம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்டு கன்னியாகுமரியில் இருந்து இரணியலுக்கு ஷீரடி சாய்பாபாவின் அலங்கார ரத யாத்திரை ஊர்வலம் புறப்பட்டு சென்றது.

நிகழ்ச்சிக்கு இரணியல் ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை தலைவர் சிதம்பரதாஸ் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா ஆசியுரை வழங்கினார். மாவட்ட மகிளா கோர்ட்டு நீதிபதி ஜாண் ஆர்.டி. சந்தோ‌ஷம், பத்மநாபபுரம் சார்பு நீதிபதி அருணாச்சலம், கூடுதல் மாவட்ட நீதிபதி பாபு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜயபாஸ்கரன், குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி ஆகியோர் ரத ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.

இதில் குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவை தலைவர் கோபி, கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  இந்த ஊர்வலம் விவேகானந்தபுரம், மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு, கொட்டாரம், பொற்றையடி, சுசீந்திரம், கோட்டார், ஆசாரிப்பள்ளம், குருந்தன்கோடு வழியாக இரணியல் ஷீரடி சாய்பாபா அன்பாலயம் சென்றடைந்தது.

மேலும் செய்திகள்