முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மரண தினம் குறித்து சிவசேனா சந்தேகம்

பல்வேறு உடல் நலக்கோளாறுகளால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், கடந்த 16–ந் தேதி மாலையில் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

Update: 2018-08-26 23:00 GMT

மும்பை,

வாஜ்பாய் உடல் மறுநாள் டெல்லியில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

வாஜ்பாய் இறந்து 10 நாட்கள் கடந்திருக்கும் நிலையில், அவரது இறப்பு தினம் குறித்து சிவசேனா தற்போது சந்தேகம் கிளப்பி இருக்கிறது. அந்த கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், கட்சிப்பத்திரிகையான சாம்னாவின் ஆசிரியருமான சஞ்சய் ராவத், இது தொடர்பாக அந்த பத்திரிகையில் கட்டுரை எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறும்போது, ‘வாஜ்பாய் ஆகஸ்டு 16–ந் தேதி இறந்தார். ஆனால் 12 மற்றும் 13–ந் தேதிகளிலேயே அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. சுதந்திர தினத்தன்று தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு தேசிய துக்கம் அனுசரிப்பதை தவிர்க்கவும், பிரதமர் மோடி செங்கோட்டையில் உரையாற்றுவதற்காகவும், வாஜ்பாய் 16–ந் தேதி இந்த உலகை விட்டு சென்றுள்ளார் அல்லது அவரது இறப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதன் மூலம் வாஜ்பாயின் மரண தினம் குறித்து மறைமுகமாக சிவசேனா சந்தேகம் கிளப்பி இருக்கிறது. பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனாவே வாஜ்பாய் மரண தினம் குறித்து சந்தேகம் கிளப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்