கார் கவிழ்ந்து புதுமாப்பிள்ளை உள்பட 4 பேர் படுகாயம்

எட்டயபுரம் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து புதுமாப்பிள்ளை உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-08-27 21:45 GMT
எட்டயபுரம், 

ஓட்டப்பிடாரம் அருகே எப்போதும் வென்றான் மேல தெருவைச் சேர்ந்தவர் மூக்கையா மகன் உத்தண்டு முருகன் (வயது 31). என்ஜினீயரான இவர் கோவில்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருக்கு வருகிற 9-ந்தேதி திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நேற்று முன்தினம் உத்தண்டு முருகன் தனது திருமணத்துக்கு அழைப்பிதழ் அச்சிட ஆர்டர் கொடுப்பதற்காக, தனது காரில் நண்பர்களுடன் கோவில்பட்டிக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் அவர்கள் இரவில் கோவில்பட்டியில் இருந்து எப்போதும் வென்றானுக்கு காரில் திரும்பி சென்று கொண்டிருந்தனர். உத்தண்டு முருகன் காரை ஓட்டிச் சென்றார்.

எட்டயபுரம் அருகே குமாரகிரி புதூர் அருகில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக கார் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் உத்தண்டு முருகன், அவருடைய நண்பர்களான எப்போதும் வென்றானைச் சேர்ந்த நாகராஜன் மகன் செல்வகுமார் (27), நாராயணன் மகன் நாகேந்திரன் (27), பெருமாள் மகன் மாதவன் (31) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும், எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்