கரூரில் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் பரபரப்பு

கரூரில் சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-08-28 22:45 GMT
கரூர்,

கரூர் அண்ணா வளைவு கார்னர் ராணிமங்கம்மாள் சாலையில் நேற்று இரவு திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. அப்போது அங்கு தார்சாலை பெயர்ந்து 4 அடி ஆழத்திற்கு கீழே புதைந்தது. இதன்காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பசுதிபாளையம், பாலம்மாள்புரம் உள்ளிட்ட பகுதியிலிருந்து கரூர் நோக்கி வந்த வாகனங்களும், கரூரில் இருந்து 5 ரோடு பகுதியை நோக்கி செல்லும் வாகனங்களும் இருபுறமும் நிறுத்தப்பட்டன.

 இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி விட்டனர். மேலும் சர்ச் கார்னர், காமராஜர் மார்க்கெட் அருகே போலீசார் நிறுத்தப்பட்டு அந்த சாலை வழியாக வந்த வாகனங்களை பாதுகாப்பு கருதி வேறு வழியில் செல்லுமாறு அறிவுறுத்தினர்.

இளைஞர்கள் சிலர் இந்த பள்ளத்தை செல்பி எடுத்து முகநூலில் பதிவிட்டனர். நகராட்சி அதிகாரிகள் வந்து, அந்த பள்ளத்தை பார்வையிட்டு அதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்குமுன்பு ரத்தினம் சாலை, ராஜாஜி சாலை ஆகிய இடங்களில் இது போன்ற பள்ளங்கள் ஏற்பட்டிருக்கிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் பாதாள சாக்கடைக்கு சாலையை தோண்டிய பிறகு புதிய சாலை அமைப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்