செய்யாறு கன்னியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
செய்யாறு கன்னியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
செய்யாறு,
செய்யாறு பங்களா தெருவில் கன்னியம்மன் கோவில் உள்ளது. அதே பகுதியை சேர்ந்த பரத் (வயது 40) என்பவர் கோவில் பூசாரியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு பூசாரி வழக்கம் போல் பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலையில் பூசாரி கோவிலை திறந்து உள்ளே சென்றார். அப்போது உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த காணிக்கை பணம் திருட்டு போயிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கோவில் நிர்வாகி ஸ்ரீதர் செய்யாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் ஷாகின் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.