சென்னை ஆவடி அருகே கள்ளக்காதலியின் மகளை கர்ப்பமாக்கிய தொழிலாளி கைது

ஆவடி அருகே, கள்ளக்காதலியின் மகளை கர்ப்பமாக்கிய தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2018-09-02 23:00 GMT
ஆவடி,

ஆவடியை அடுத்த மோரை அண்ணா நகரைச் சேர்ந்தவர் இன்பநேசன்(வயது 33). தச்சுத்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். ஆனால் குழந்தைகள் இல்லை.

இன்பநேசனுக்கும், கணவரை இழந்த பெண் ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு, முதல் கணவர் மூலம் ஒரு மகனும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இன்பநேசன், அந்த பெண் மற்றும் அவரது பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் அந்த பெண்ணின் 13 வயது மகளுக்கு கடந்த மாதம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அந்த சிறுமியை, அவரது தாய் மற்றும் உறவினர்கள் பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச்சென்றனர்.

அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், அவள் 5 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதைகேட்டு சிறுமியின் தாய் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு யார் காரணம்? என சிறுமியிடம் விசாரித்தனர்.

அப்போது அவர், வீட்டில் தனியாக இருக்கும்போது இன்பநேசன்தான் தன்னை கற்பழித்ததாகவும், இதுபற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியதால் மறைத்து விட்டதாகவும் தெரிவித்தார். இதையடுத்து வெளியில் யாருக்கும் தெரிந்தால் அவமானம் என்பதால் சிறுமிக்கு அதே தனியார் மருத்துவமனையில் கரு கலைப்பு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் சிகிச்சை முடிந்து சிறுமியை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

இதற்கிடையில் இந்த விவகாரம் சிறுமியிகள்ன் தாத்தாவுக்கு தெரிந்தது. அவர், இது குறித்து ஆவடி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷோபாராணி வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் இரவு சென்னை வேளச்சேரி பகுதியில் இருந்த இன்பநேசனை கைது செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தார்.

அதில் அவர், சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதுடன், தானும் தற்கொலை செய்து கொள்வேன் என்று சிறுமியை மிரட்டி உள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி தனது தாய் உள்பட யாரிடமும் சொல்லாமல் இருந்து உள்ளார்.

தற்போது அவர் கர்ப்பமானதால் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து உள்ளது. இதையடுத்து இன்பநேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை நேற்று மாலை பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்