ராமேசுவரம் தீவு பகுதியில் மது விற்பனையை முற்றிலும் தடை செய்ய வேண்டும் - டிராபிக் ராமசாமி பேட்டி

ராமேசுவரம் தீவு பகுதியில் மது விற்பனையை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என டிராபிக் ராமசாமி கூறியுள்ளார்.

Update: 2018-09-04 23:15 GMT

ராமேசுவரம்,

டிராபிக் ராமசாமி நேற்று ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்துக்கு சொந்த வேலையாக வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

 அகில இந்திய புண்ணிய தலமான ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதியில் முழுமையாக மது விற்பனையை தடை செய்ய வேண்டும். தற்போது பாம்பனில் மதுபானக்கடை இருந்தாலும் ராமேசுவரத்திலும் சட்ட விரோதமாக மது விற்பனை பெருமளவில் நடைபெறுவதாக தெரியவருகிறது. காவல்துறையினர் இதில் கவனம் செலுத்தி சட்டவிரோத மது விற்பனையை தடுக்க வேண்டும். ராமேசுவரம் தீவு பகுதியில் முற்றிலும் மது விற்பனையை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமேசுவரத்துக்கு சுற்றுலா துறை சார்பில் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதிகள் முறையாக பயன்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. தற்போது மீண்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில் நல்ல திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும். தமிழகத்தில் இந்த ஆண்டுக்குள் ஆட்சி கவிழும். தமிழக அரசியலில் சினிமா துறையினர் காலூன்ற முடியாது. வருகிற தேர்தலில் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் 50 தொகுதிகளில் போட்டியிட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்