விமானப்படை ஒப்பந்த ஊழியரை தாக்கிய வழக்கில் 2 பேர் கைது

ஆவடி அருகே விமானப்படை ஒப்பந்த ஊழியரை தாக்கிய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-09-04 22:15 GMT
ஆவடி,

ஆவடியை அடுத்த கரிமேடு அண்ணாநகர் தந்தை பெரியார் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). இவர் ஆவடியில் உள்ள இந்திய விமானப்படையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 1–ந் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். வீட்டின் அருகே சென்றபோது, அங்கு இருந்த மர்ம நபர்கள் சிலர் சுரேசை கல்லால் தாக்கிவிட்டு தப்பி சென்றனர்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சுரேசை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். சுயநினைவு இல்லாமல் இருக்கும் சுரேசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து முத்தாபுதுபேட்டை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் சுரேசை கல்லால் தாக்கியதாக கரிமேடு அண்ணாநகர் வள்ளலார் நகரை சேர்ந்த பிரபு (26) மற்றும் லோகேஷ் (22) ஆகிய இருவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில் பின்வரும் தகவல்கள் வெளிவந்தது.

சம்பவத்தன்று பிரபு, லோகேஷ் இருவரும் கஞ்சா போதையில் சுரேஷ் வீட்டுக்கு அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்த சுரேஷை அவர்கள் அசிங்கமாக திட்டி உள்ளனர்.

இதுபற்றி சுரேஷ் அவர்களிடம் கேட்டபோது, அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் சேர்ந்து கல்லால் சுரேசின் தலையில் பலமாக தாக்கியது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் பிரபு, லோகேஷ் ஆகிய 2 பேரையும் அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்