பெரம்பலூர் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் 330 மாணவிகள் பங்கேற்பு

பெரம்பலூர் மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் 330 மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.

Update: 2018-09-06 22:30 GMT
பெரம்பலூர்,

பள்ளி கல்வித்துறை சார்பாக நடத்தப்படும் பெரம்பலூர் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் பெரம்பலூரில் உள்ள எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று 14, 17, 19 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு தடகள போட்டிகள் நடத்தப்பட்டது. மாணவிகளுக்கான தடகள போட்டியை பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சுந்தரம் தொடங்கி வைத்தார்.

இதில் 14 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு 100, 200, 400, 800 மீட்டர் ஓட்டமும், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகள் நடைபெற்றது. 17, 19 வயதிற்குட்பட்டோருக்கான மாணவிகள் பிரிவில் 100, 200, 400, 800 மீட்டர் ஓட்டமும், 100 மீட்டர் தடை ஓட்டமும், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய தடகள போட்டிகளும் நடைபெற்றது.

நேற்று நடைபெற்ற போட்டிகளில் பெரம்பலூர், குன்னம் குறுவட்ட அளவிலான தடகள போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மொத்தம் 330 மாணவிகள் கலந்து கொண்டனர். நேற்று நடந்த தடகள போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நேற்று 19 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 3 ஆயிரம், 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம் மட்டும் நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) 14,17,19 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான தடகளப் போட்டிகள் நடைபெறுவதுடன் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நிறைவு பெறுகிறது. தடகள போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பெறும் மாணவ-மாணவிகளும் மண்டல அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்