ரெயில்வே தண்டவாளத்தில் இறந்து கிடந்த கட்டிட தொழிலாளி

குளித்தலை சுங்ககேட் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் கட்டிட தொழிலாளி இறந்து கிடந்தார். இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-09-07 22:00 GMT
குளித்தலை, 

குளித்தலை- மணப்பாறை சாலையில் குளித்தலை சுங்ககேட் அருகே ரெயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில்வே கேட்டின் அருகே உள்ள தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் காயங்களுடன் நேற்று இறந்துகிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. இந்த நிலையில் இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கரூர் ரெயில்வே போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் இதுகுறித்து விசாரித்த போது இறந்து கிடந்தவர் குளித்தலை கோட்டமேடு பகுதியை சேர்ந்த நெடுஞ்செழியன் மகன் அன்புச்செல்வன்(வயது 21) என்பது தெரியவந்தது. மேலும் அவர் திருப்பூரில் கட்டிட வேலை செய்துவந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு திருப்பூரில் இருந்து குளித்தலைக்கு வந்த இவர், தனது ஊருக்கு செல்வதற்காக ரெயில்வே தண்டவாளம் அருகே நடந்து செல்லும்போது ரெயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து கரூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்