முழுஅடைப்பு போராட்டம்: தமிழகத்தில் 70 சதவீத லாரிகள் ஓடவில்லை

தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக நேற்று சுமார் 70 சதவீத லாரிகள் ஓடவில்லை என சம்மேளன செயலாளர் தன்ராஜ் கூறினார்.

Update: 2018-09-10 22:00 GMT
நாமக்கல்,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆகியவை ஆதரவு தெரிவித்து இருந்தன.

இதனால் நேற்று தமிழகம் முழுவதும் பெரும்பாலான லாரிகள் இயக்கப்படவில்லை. எனவே பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் தன்ராஜ் கூறியதாவது:-

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நாங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டு வருகிறோம். எனவே டீசல் விலையை குறைக்கக்கோரி பலமுறை போராட்டங்களை நடத்தி உள்ளோம். அந்த வகையில் தான் காங்கிரஸ் கட்சி அறிவித்த முழு அடைப்பு போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவித்து இருந்தோம்.

சம்மேளனம் ஆதரவு தெரிவித்து இருந்ததால் தமிழகம் முழுவதும் சுமார் 70 சதவீத லாரிகள் நேற்று ஓடவில்லை. இதனால் லாரி உரிமையாளர்களுக்கு மட்டும் சுமார் ரூ.100 கோடி இழப்பு ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் தமிழகம் முழுவதும் சுமார் 90 சதவீத மணல் லாரிகள் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயக்கப்படவில்லை என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி கூறினார்.

முட்டை லாரிகளை பொறுத்தவரையில் தினசரி மாலை நேரத்தில் தான் லோடு ஏற்றிக்கொண்டு வெளிமாநிலங்களுக்கு புறப்படும். எனவே முட்டைகளை வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு கொண்டு செல்வதில் பாதிப்பு ஏற்படவில்லை என தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சின்ராஜ் கூறினார்.

மேலும் செய்திகள்