மூடபித்ரியில் உள்ள தனியார் கல்லூரி விடுதி அறையில் பெங்களூரு மாணவி தற்கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை
மூடபித்ரியில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் பெங்களூரு மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
மங்களூரு,
மூடபித்ரியில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் பெங்களூரு மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
கல்லூரி மாணவி
பெங்களூருவை சேர்ந்தவர் வினுதா (வயது 18). இவர் மங்களூரு அருகே மூடபித்ரியில் உள்ள தனியார் ஜூனியர் கல்லூரியில் விடுதியில் தங்கி பி.யூ.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை வெகு நேரமாகியும் அவருடைய விடுதியின் அறை திறக்காமல் இருந்தது. இதனால் சக மாணவிகள், அறை கதவை தட்டினர்.
ஆனால் வெகு நேரம் தட்டியும் வினுதா கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த மாணவிகள், ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது, வினுதா தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தற்கொலை
இதுகுறித்து அவர்கள், விடுதி வார்டனுக்கு தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக விடுதி வார்டன், மூடபித்ரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அவர்கள் தூக்கில் பிணமாக தொங்கிய வினுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மூடபித்ரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மாணவி வினுதா தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. ஆனால், அவருடைய தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை.
போலீஸ் விசாரணை
மாணவி வினுதா, பி.யூ.சி. முதலாம் ஆண்டு தேர்வில் 98 சதவீதம் மதிப்பெண் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மூடபித்ரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.