துப்பாக்கியால் மனைவியை சுட்டுக்கொன்றுவிட்டு கணவர் தற்கொலை நாக்பூரில் அதிர்ச்சி சம்பவம்

துப்பாக்கியால் மனைவியை சுட்டுக்கொன்றுவிட்டு கணவர் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நாக்பூரில் நடந்துள்ளது.

Update: 2018-09-12 22:00 GMT
நாக்பூர், 

துப்பாக்கியால் மனைவியை சுட்டுக்கொன்றுவிட்டு கணவர் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நாக்பூரில் நடந்துள்ளது.

விவாகரத்து வழக்கு

நாக்பூர் நகர் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திர நாக்புரே(வயது47). இவரது மனைவி மீனா(வயது40). இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.

கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக தெரிகிறது. இதனால் ரவீந்திர நாக்புரேவை பிரிந்த மனைவி மீனா தத்தாராயா நகர் பகுதியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

கணவன், மனைவி இருவரின் விவாகரத்து வழக்கு குடும்பநல கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ரவீந்திர நாக்புரே விசாரணைக்காக நேரில் ஆஜராகவில்லை.

டாக்டர்கள் பரிசோதனை

இதையடுத்து மீனா தன் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் இரவு 11 மணி அளவில் அங்கு சென்ற ரவீந்திர நாக்புரே, தான் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் மீனாவை சுட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடித்தார்.

மேலும் அதே துப்பாக்கியால் தன்னைதானே ரவீந்திர நாக்புரே சுட்டுக்கொண்டார்.

சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு அருகில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் இருவரும் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்