பாகலூர் அருகே இருதரப்பினர் இடையே மோதல் - 11 பேர் கைது

பாகலூர் அருகே இருதரப்பினர் இடையே நடைபெற்ற மோதலில் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-09-12 23:00 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா பாகலூர் பக்கமுள்ள சானமங்கலம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரது மகன் ஹரீஷ் (வயது 20). இவர் தனது நண்பர் பி.மகேஷ் (20) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்பகுதியில் உள்ள ஒரு மளிகை கடை முன்பு சென்றபோது, அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு மகேஷ் (24) என்பவர், மோட்டார் சைக்கிளை ஹரீஷ் வேகமாக ஓட்டி சென்றதை கண்டித்து தட்டிக்கேட்டார்.

இது தொடர்பாக 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் பால் கேன் மற்றும் கட்டையால் தாக்கி கொண்டனர். மேலும் ஹரீசின் உறவினர்களையும் மகேஷ் மற்றும் அவரது தரப்பினர் தாக்கியதாக தெரிகிறது. இரு தரப்பினரும் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் ஹரீசின் தாய் கீதம்மாள் மற்றும் நாகம்மா, சின்னம்மா, முனிராஜ் ஆகியோர் காயம் அடைந்து ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மகேஷ் தரப்பினர் தங்களை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கீதம்மாள், பாகலூர் போலீசில் அளித்த புகாரின்பேரில், பில்லப்பா மகன் மகேஷ் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல், ஹரீஷ் தரப்பினர் தாக்கியதில், தங்கள் தரப்பை சேர்ந்த பைரேஷ், வெங்கடேஷ், பிரதீபா உள்பட 4 பேர் காயமடைந்ததாக, பில்லப்பா மகன் மகேஷ் புகார் அளித்ததன்பேரில், பாகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஹரீஷ் உள்பட 5 பேரை கைது செய்தனர். இருதரப்பையும் சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்