டயர் வெடித்ததால் கார் கவிழ்ந்து தாய்-மகன் பலி; தந்தை படுகாயம்

டயர் வெடித்ததால் கார் கவிழ்ந்து தாய்-மகன் பலியானார்கள். தந்தை படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2018-09-12 22:26 GMT
சமயபுரம்,


திருச்சி மாவட்டம் இனாம் சமயபுரம் ஊராட்சியைச் சேர்ந்த ச.புதூரை சேர்ந்தவர் மூக்கன் (வயது 65). இவரது மனைவி வசந்தா (56). இவர்களது மகன் அரவிந்தன் (32). தந்தையும், மகனும் அதே பகுதியில் உள்ள சிமெண்டு ஆலையில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் மூக்கன், வசந்தா, அரவிந்தன் ஆகிய 3 பேரும் நேற்று பெரம்பலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர்.

பின்னர் அங்கு இருந்து, சிறுவாச்சூரில் உள்ள அரவிந்தனின் தாத்தாவை பார்த்துவிட்டு மீண்டும், வீட்டுக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். காரை அரவிந்தன் ஓட்டினார். கார் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெடுங்கூர் அருகே வந்த போது, எதிர்பாராத விதமாக காரின் பின்பக்க டயர் வெடித்தது. இதில் நிலை தடுமாறிய கார் அங்குமிங்கும் ஓடி தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த அரவிந்தன் காரின் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காரில் வந்த மூக்கன், வசந்தா ஆகியோர் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரவிந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து படுகாயமடைந்த மூக்கன், வசந்தா ஆகிய 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் இருங்களூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு வசந்தாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மூக்கன் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிரிழந்த அரவிந்தனுக்கு திருமணமாகி 1½ வருடங்களே ஆகியுள்ளது. இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும், ஆறு மாத குழந்தையும் உள்ளனர். இந்த விபத்து குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயும், மகனும் இறந்த சம்பவம் அவர்களுடைய உறவினர்களை மட்டுமின்றி ச.புதூர் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

மேலும் செய்திகள்