மதுரை அருகே விபத்து: மணல் லாரி மோதி, மருத்துவ கல்லூரி மாணவர் பலி

மதுரை அருகே நடந்த விபத்தில் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-09-12 22:47 GMT
மதுரை,

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் காந்தி தெருவை சேர்ந்தவர் சுப்புராஜ். இவருடைய மகன் செல்லத்துரை(வயது 23). இவர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் பட்டமேற்படிப்பு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் இவர் விடுமுறை நாட்களில் மதுரைக்கு வந்து செல்வது வழக்கம். இந்தநிலையில் நேற்று மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு வந்தார். பின்னர் அவர் மீண்டும் திரும்பி கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார்.

மதுரை கருப்பாயூரணி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வரிச்சியூர்-சிவகங்கை சாலையில் செல்லத்துரை மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு மணல் லாரி சென்றது. அந்த லாரியை அவர் முந்தி செல்ல முயன்றபோது லாரியின் பக்கவாட்டில், அவர் சென்ற மோட்டார் சைக்கிள் உரசியது.

இதில் நிலைதடுமாறிய செல்லத்துரை லாரியின் கீழ் பகுதியில் விழுந்து விட்டார். அப்போது, லாரியின் பின்பக்க டயர் அவர் தலையில் ஏறி இறங்கியது. தலைக்கவசம் அணிந்திருந்த போதும், அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

விசாரணை

இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கருப்பாயூரணி போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்