இழப்பீடு உத்தரவை எதிர்த்த மனு தள்ளுபடி: ‘ஒவ்வொரு குடிமகனையும் பாதுகாப்பது அரசின் கடமை’ மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து

ஒவ்வொரு குடிமகனையும் பாதுகாப்பது அரசின் கடமை என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Update: 2018-09-12 22:51 GMT
மதுரை, 

மதுரை வாடிப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி நித்யா. இவர்களின் மகள் தனலெட்சுமி. சோழவந்தானில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்தார். கடந்த 7.6.2016 அன்று சைக்கிளில் பள்ளிக்கு சென்றபோது, வைகை ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டி மோதி உயிரிழந்தார். இதையடுத்து ரூ.10 லட்சம் இழப்பீடு கேட்டு அவரது தாயார் நித்யா, மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, நித்யாவுக்கு அரசு வேலையும், ரூ.10 லட்சம் இழப்பீடும் வழங்க வேண்டும் என்று கடந்த ஆண்டு மே மாதம் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், ‘மனுதாரருக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சம் நிவாரணமும், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் விதவை நிதி உதவி, கணவர் இறந்ததும் ரூ.10 ஆயிரம் நிவாரணமும் வழங்கப்பட்டுள்ளது‘ என்று கூறப்பட்டிருந்தது.

அரசின் கடமை

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்து நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மனுதாரரின் மகள் சட்ட விரோதமாக மணல் அள்ளிச்சென்ற மாட்டு வண்டி மோதி உயிரிழந்ததும், அவர் இறந்து ஒரு வாரத்தில் மனுதாரரின் கணவர் உயிரிழந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் குற்றவாளிகள் மீது தமிழ்நாடு கனிமவளச் சட்டப்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் பாதுகாப்பது அரசின் தலையாய கடமை. அதிகாரிகளின் கவனக்குறைவால் தனது கடமையில் இருந்து அரசு தவறியுள்ளது. மனுதாரருக்கு இழப்பீடு வழங்க வேண்டியது அரசின் கடமை. இதனால் தனி நீதிபதி உத்தரவில் தலையிட முகாந்திரம் இல்லை. இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்