மூதாட்டியை தாக்கி கொள்ளையடித்த 3 பேர் கைது

மன்னார்குடிஅருகே மூதாட்டியை தாக்கி கொள்ளையடித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 13 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2018-09-13 22:46 GMT
சுந்தரக்கோட்டை,

மன்னார்குடி அருகே உள்ள கண்டிதம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சரோஜா(வயது 70). இவருடைய மகன்கள் மற்றும் மகள்கள் வெளிநாட்டில் இருப்பதால் இவர் தனியாக வசித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த மாதம் 27-ந் தேதி சரோஜா வீட்டுக்கு வந்த 3 பேர் தனியாக இருந்த அவரை தாக்கி 13 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து பரவாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் இந்த வழக்கில் கொள்ளையர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் கண்டிதம்பேட்டையை சேர்ந்த திருமுருகன் (33) என்பவருக்கு இந்த கொள்ளையில்
தொடர்பு இருப்பது தெரியவந்தது. போலீசார் திருமுருகனை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஏற்கனவே திருமுருகன் மற்றொரு வழக்கில் சிறையில் இருந்தபோது பழக்கமான மன்னார்குடி கீழப்பாலம் பகுதியை சேர்ந்த எக்ஸ்பர்ட்(43), தூத்துக்குடி மாவட்டம் வல்லிமிலை என்ற பகுதியை சேர்ந்த வேல்முருகன் (26) ஆகியோருக்கும் இந்த கொள்ளையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் எக்ஸ்பர்டையும், சென்னை கொரட்டூரில் கார் டிரைவராக வேலை பார்த்து வரும் வேல்முருகனையும் கைது செய்து மன்னார்குடிக்கு கொண்டு வந்தனர். இவர்கள் 3 பேரும் கொள்ளையடிக்க பயன்படுத்திய காரையும், கொள்ளையடித்த 13 பவுன் நகையையும் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்