பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்தவர் சாவு

முத்துப்பேட்டை அருகே பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்த சென்னையை சேர்ந்தவர் உயிரிழந்தார்.

Update: 2018-09-13 22:51 GMT
முத்துப்பேட்டை,


ராமநாதபுரத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி நேற்று முன்தினம் ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சில் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ஆல்பர்ட் (வயது 45) என்பவர் குடிபோதையில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. பஸ் முத்துப்பேட்டை அருகே உள்ள ஆலங்காடு கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது ஆல்பர்ட் பஸ் படிக்கட்டு அருகில் நின்று சத்தம் போட்டதாக தெரிகிறது.

அப்போது அவர் ஓடும் பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்தார். உடனடியாக அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவரை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆல்பர்ட் உயிரிழந்தார்.

இதுகுறித்து அரசு பஸ் கண்டக்டர் ராமநாதபுரம் மாவட்டம், கோக்குரணியை சேர்ந்த சந்திரசேகரன் (54) புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்