லாரிகள் மோதிக்கொண்டதில் 3 பேர் பலி

விருத்தாசலம் அருகே 2 லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் இறந்தனர்.

Update: 2018-09-14 21:30 GMT

விருத்தாசலம்,

நாமக்கலில் இருந்து கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடிக்கு கோழிகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டிருந்தது. லாரியை குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த பழனிவேல் (வயது 40) ஓட்டி வந்தார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த பாபு (22), பிரிதிவிராஜ் (22), சரத் (20) ஆகியோர் லாரியில் வந்தனர்.

அதே சமயம் நெய்வேலியில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு டால்மியாபுரம் நோக்கி மற்றொரு லாரி சென்றது. இந்த லாரியை அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மகாலிங்கம் (49) ஓட்டி சென்றார். இரு லாரிகளும் விருத்தாசலத்தை அடுத்த அரசக்குழி பஸ் நிறுத்தம் அருகே எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் நிலக்கரி ஏற்றி சென்ற லாரி டிரைவர் மகாலிங்கம், குறிஞ்சிப்பாடி லாரி டிரைவர் பழனிவேல், அவருடன் வந்த பாபு ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பிரிதிவிராஜ், சரத் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்தில் சிக்கிய 2 லாரிகளும் நடுரோட்டில் கவிழ்ந்து கிடந்ததால், விருத்தாசலம்–கடலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது.

மேலும் செய்திகள்