ஓட்டப்பிடாரம், கோவில்பட்டியில் சமுதாய வளைகாப்பு விழா

ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி பகுதியில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

Update: 2018-09-14 21:30 GMT
ஓட்டப்பிடாரம், 

ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி பகுதியில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

வளைகாப்பு விழா

ஓட்டப்பிடாரத்தில் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா தலைமை தாங்கினார். மாவட்ட குழந்தைகள் திட்ட அலுவலர் முத்துலட்சுமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக உதவி கலெக்டர் (பயிற்சி) அனு கலந்து கொண்டு, கர்ப்பிணிகளுக்கு வளையல்கள் மற்றும் சீதன பொருட்கள் வழங்கினார். மேலும் கர்ப்பிணிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில், மொத்தம் 400 கர்ப்பிணி பெண்களுக்கு சீதன பொருட்கள் வழங்கப்பட்டன. ஓட்டப்பிடாரம் வட்டார மருத்துவ அலுவலர் தங்கமணி, மாவட்ட தாய்சேய் நல அலுவலர் பகவதி, கோவில்பட்டி மருத்துவ பணிகள் நேர்முக உதவியாளர் மாரிமுத்து, ஆரம்ப சுகாதார மருத்துவர்கள் அன்புமாலதி, சுசிலா, ஜெயபிரபா, ஆரம்ப சுகாதார மேற்பார்வையாளர் மதுரம் பிரைட்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி-கயத்தாறு

கோவில்பட்டி ஸ்டாலின் காலனி சமுதாய நலக்கூடத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் மாவட்ட திட்ட அலுவலகம் சார்பில், கோவில்பட்டி தாலுகாவில் உள்ள கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

டாக்டர் உமா செல்வி தலைமை தாங்கி, 35 கர்ப்பிணிகளுக்கு மங்கள பொருட்களை வழங்கி வாழ்த்தி பேசினார். அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

திட்ட மேற்பார்வையாளர் சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கயத்தாறு புனித ஆரோக்கிய அன்னை ஆலய சமுதாய நலக்கூடத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில், கயத்தாறு தாலுகாவில் உள்ள கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தாவூத்ஹூதா பேகம் தலைமை தாங்கி, 200 கர்ப்பிணிகளுக்கு மங்கள பொருட்களை வழங்கி வாழ்த்தி பேசினார்.

அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர்கள் கண்ணன், விஜயகுமார் மற்றும் செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்