குறைந்த அளவு மீன்கள் கிடைத்ததால் பாம்பன் மீனவர்கள் ஏமாற்றம்

பாம்பன் மீனவர்களுக்கு குறைந்த அளவில் மீன்கள் கிடைத்ததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Update: 2018-09-14 21:45 GMT

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் மீன்பிடி தொழில் சுமார் 120–க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் ஈடுபட்டுள்ளன. இந்த படகுகளை நம்பி ஏராளமான மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்தநிலையில் பாம்பனில் உள்ள விசைப்படகு மீனவர்கள் டீசல் விலை உயர்வை கண்டித்தும், மீனவர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு அரசு உரிய விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தியும் கடந்த 9–ந்தேதி முதல் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால் ஏராளமான மீனவ குடும்பங்கள் பெரும் சிரமமடைந்தனர். இந்நிலையில் மீனவர்களின் வாழ்வாரத்தை கருத்தில் கொண்டு பாம்பனில் உள்ள விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று நேற்றுமுன்தினம் தெற்குவாடி துறைமுக கடற்கரையில் இருந்து சுமார் 80–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 500–க்கும் மேற்பட்ட மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் நேற்று காலை கிளாத்தி, திருக்கை, டியூப் கணவாய், களவாய், சிங்கி, காரல், பாறை உள்ளிட்ட பல வகை மீன்களுடன் கரை திரும்பினர். அனைத்து படகுகளிலும் மிகவும் குறைந்த அளவிலே மீன்கள் கிடைத்ததால் மீனவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

இதனால் ஒவ்வொரு படகிற்கும் ரூ.10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையிலும் நஷ்டம் ஏற்பட்டதாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர். கடந்த 5 நாட்களாக வெறிச்சோடி காணப்பட்ட தெற்குவாடி கடற்கரை பகுதி நேற்று மீனவர்கள் மீன்பிடித்து திரும்பியதைத தொடர்ந்து பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்