ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலையை வைத்து தி.மு.க.–காங்கிரஸ் அரசியல் விளையாட்டு விளையாடுகின்றனர் - எச்.ராஜா குற்றச்சாட்டு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7பேர்களின் விடுதலையை வைத்து தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி அரசியல் விளையாட்டு விளையாடுகின்றனர் என்று பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றம் சாட்டி உள்ளார்.

Update: 2018-09-14 23:30 GMT

மானாமதுரை,

மானாமதுரையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முண்ணனி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்து முன்ணணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் குப்புசாமி தலைமை தாங்கினார். இந்து முண்ணனி நகர தலைவர் மாரிமுத்து வரவேற்றார். நிகழ்ச்சியில் பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் கண்ணன், நகர தலைவர் சங்கரசுப்ரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விநாயகர் சிலை ஊர்வலத்தை பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலர் எச்.ராஜா தொடங்கி வைத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலையை வைத்து தி.மு.க.வும் காங்கிரசும் அரசியல் விளையாட்டை விளையாடி வருகின்றனர்.

அந்த 7பேர் தமிழர்கள் என்றால் குண்டு வெடிப்பின் போது உயிரிழந்த 14பேர்களும் தமிழகர்கள் தான். அவர்களுக்காக யாருமே பேசவில்லை. பின்னர் ஏன் இந்த 7பேர் விடுதலையில் கவர்னர் சட்டத்திற்கு உட்பட்டு சரியான முடிவு எடுப்பார் என்று கூறுகின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வில் மத்திய அரசை அ.தி.மு.க. குறை கூறுவது தவறு. ஏன் பெட்ரோல் மீதான வரியை மாநில அரசு ரூ.28 குறைக்கலாம். ஜி.எஸ்.டி. வரிக்குள் பெட்ரோல்–டீசல் விலையை கொண்டு வருவதற்கு மாநில அரசுகள் ஒத்துவரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்