எழும்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் பீதியால் பரபரப்பு

எழும்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் பீதியால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-09-14 22:00 GMT
சென்னை,

சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன்(வயது 30). இவரது மனைவி சோனியா. இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் குழந்தையின் நுரையீரலில் உள்ள பிரச்சினை காரணமாக கடந்த வாரம் எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு குழந்தை சோனியா வெளியே சென்ற நேரம் அழுதது. நீண்ட நேரமாகியும் சோனியா வராததால், அங்கு இருந்த பெண் ஒருவர் குழந்தையை தூக்கிக் கொண்டு சோனியாவை தேட சென்றார். அந்த பெண் வெளியே சென்றதும் உள்ளே வந்த சோனியா குழந்தையை காணவில்லை என்று கதறினார். பின்னர் போலீசாரிடம் இது குறித்து புகார் கூறினார்.

குழந்தை காணவில்லை என்று நள்ளிரவு சோனியா கதறியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் குழந்தையை கொண்டு சென்ற பெண் மருத்துவமனை ‘லிப்டில்’ வருவதை கண்ட போலீசார் அவரிடம் இது குறித்து கேட்கையில் நடந்த விவரம் தெரியவந்தது. இதையடுத்து எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் இருந்த குழந்தை கடத்தல் பீதி அடங்கியது.

மேலும் செய்திகள்