தென்காசி, செங்கோட்டையில் 144 தடை உத்தரவு நெல்லை கலெக்டர் அறிவிப்பு

செங்கோட்டையில் நேற்று முன்தினம் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் நடந்த கலவரத்தை தொடர்ந்து, தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நெல்லை கலெக்டர் அறிவித்தார்.

Update: 2018-09-14 22:00 GMT
செங்கோட்டையில் நேற்று முன்தினம் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் நடந்த கலவரத்தை தொடர்ந்து, தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நெல்லை கலெக்டர் அறிவித்தார்.

கலவரம்

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் நேற்று முன்தினம் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் கலவரம் வெடித்தது. இதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். 30-க்கும் மேற்பட்ட கார், மோட்டார் சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதால் போலீசார் குவிக் கப்பட்டனர். நேற்று 2-வது நாளாக அங்கு பதற்றம் நீடித்தது.

கலெக்டர் ஆலோசனை

இந்த நிலையில், கலவரம் ஏற்பட்ட பகுதிக்கு நேற்று காலை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா நேரில் வந்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் செங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், நெல்லை மாநகர துணை கமிஷனர் (சட்டம்-ஒழுங்கு) சுகுணா சிங் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்துக்கு பிறகு கலெக்டர் ஷில்பா நிருபர்களிடம் கூறியதாவது:-

144 தடை உத்தரவு

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் பல இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. செங்கோட்டை பகுதியில் நேற்று முன்தினம் விநாயகர் சிலைகளை எடுத்து செல்வது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள், இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டது. வழக்கம்போல் எந்த இடங்கள் வழியாக ஊர்வலம் செல்வார்களோ, அந்த வழியாக ஊர்வலம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஊர்வலம் நடைபெறும்.

செங்கோட்டையில் ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தென்காசி, செங்கோட்டை ஆகிய தாலுகாக்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை உத்தரவு இன்று (நேற்று) முதல் நாளை (இன்று) காலை 6 மணி வரை அமலில் இருக்கும். நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில், எந்த இடத்தில் சிலைகள் கரைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளதோ, அந்த இடத்தில் மட்டும் சிலைகளை கரைக்க வேண்டும். வேறு இடங்களில் கரைக்க அனுமதி கிடையாது. மேலும் செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள 11 டாஸ்மாக் கடைகளை இன்று (நேற்று) மூடுவதற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு கலெக்டர் ஷில்பா கூறினார்.

மேலும் செய்திகள்