செவிலியர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு

ஆம்பூர் அருகே செவிலியர் வீட்டில் 20 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-09-14 21:45 GMT
ஆம்பூர், 


ஆம்பூர் அருகே உள்ள ஆலாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராதாமணி. இவரது மனைவி சரசா என்கிற சரஸ்வதி (வயது 55). இவர், ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் உதவி செவிலியராக பணிபுரிந்து வருகிறார். ராதாமணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு சரஸ்வதி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். நேற்று காலையில் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து அதில் இருந்த 20 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம், பட்டு சேலைகள், வெள்ளி கிண்ணம் மற்றும் குத்துவிளக்கு ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பிரகாஷ் பாபு, இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்