பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில்கள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.

Update: 2018-09-15 22:30 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரம்மபுரீஸ்வரர் கோவில், கடைவீதி தேரடி, காந்தி சிலை அருகே உள்ள செல்வ விநாயகர் கோவில், பழையபஸ் நிலையம் அருகே இந்திராநகரில் எம்.வி.கே.நகர், எளம்பலூர் சாலையில் நடேசன்தெரு, குளோபல் நகர், ஆர்.எம்.கே.நகர், மேரிபுரம் அருள்சக்தி விநாயகர் கோவில், துறையூர் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்.நகரில் பாலமுத்துமாரியம்மன் கோவில், சங்குப்பேட்டை பகுதி, வெங்கடேசபுரம், விளாமுத்தூர் சாலை உள்பட நகர் பகுதிகளில் மட்டும் 23 இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது.பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகரம் மற்றும் வேப்பந்தட்டை, ஆலத்தூர், குன்னம் மற்றும் பெரம்பலூர் தாலுகா பகுதிகளில் 123 இடங்களில் விநாயகர் சிலைகள் அலங்கரித்துவைக்கப்பட்டு 3 நாட்கள் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நேற்று நடந்தது. ஊர்வலத்திற்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார். ஊர்வலத்தை திருச்சி கோட்ட தலைவர் கரூர் கனகராஜ் தொடங்கி வைத்தார்.

இதில் ஆர்.எஸ்.எஸ். முன்னாள் திருச்சி கோட்ட பொறுப்பாளர் வக்கீல் பிரசன்னம், பா.ஜ.க. மாவட்ட தலைவர் சாமி.இளங்கோவன், இந்து முன்னணி கோட்ட செயலாளர் குணா, இந்து இயக்கங்களின் நிர்வாகிகள், விநாயகர் ஊர்வல கமிட்டி நிர்வாகிகள், இளைஞர்கள், சிறுவர்கள் என திரளானோர் கலந்து கொண் டனர். ஊர்வலம்பெரம்பலூர் செல்வவிநாயகர் கோவிலில் இருந்து மேள தாளம் முழங்க புறப்பட்டு காமராஜர் வளைவு, வடக்குமாதவி சாலை, சாமியப்பாநகர், எளம்பலூர் சாலை, காமராஜர் சிக்னல், சங்குப்பேட்டை, கடைவீதி வழியாக சென்று காந்தி சிலையை அடைந்தது. பின்னர் பெரம்பலூர் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் திருச்சிக்கு வேன்களில் எடுத்து சென்று காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன. விநாயகர் சிலை ஊர்வலத்தை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்